அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை டாப்ஸி. அதைத் தொடர்ந்து ஆரம்பம், கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் ஹிந்தியில் பெரும்பாலும் கதாநாயகியை மையப்படுத்திய படங்களிலேயே ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.
குறிப்பாக விளையாட்டு வீராங்கனைகளின் பயோபிக்குகளில் நடிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் தொகுத்து வழங்கும் தவான் கரேங்கே என்கிற டாக் ஷோவில் கலந்து கொண்ட டாப்ஸி தனக்கு முதல் பாலிவுட் வாய்ப்பு எப்படி கிடைத்தது என ஒரு புதிய ஆச்சரிய தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “பாலிவுட்டிற்குள் நான் அழைத்து வரப்பட்டதே நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் சாயலில் நான் இருக்கிறேன் என்கிற காரணத்தால் தான். ப்ரீத்தி ஜிந்தா எப்படிப்பட்ட அழகும் திறமையும் கொண்டவர். எவ்வளவு சுறுசுறுப்பானவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் நான் அறிமுகமான காலகட்டத்தில் அவரைப் போல இருப்பதற்கு முயற்சி செய்து வந்தேன்” என்று கூறியுள்ளார்.
2013ல் வெளியான சாஸ்மே பதூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் டாப்ஸி அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.