வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!!
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் என்ற படத்தில் நாயகியாக நடித்து தேசிய விருது பெற்றவர் பிரியா மணி. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
இந்த நேரத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால் நான் மதம் மாறிவிட்டதாக சோசியல் மீடியாவில் பலரும் கருத்து கூறி வருகிறார்கள். ஆனால் நான் மதம் மாற மாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே என் கணவரிடம் தெரிவித்து விட்டேன். அதனால் இப்போது வரை அவரவர் மத நம்பிக்கையை மதித்து பின்பற்றி வருகிறோம். அதோடு நான் முஸ்லிமை திருமணம் செய்திருப்பதால் எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று சிலர் கருத்து கூறுகிறார்கள். இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. காதலித்து ஜாதி, மதத்தை கடந்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் எங்களை பற்றி வெறுப்பு செய்திகளை பரப்பாதீர்கள்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார் பிரியாமணி.