உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தா பற்றி அமைச்சர் சுரேகா பேச்சு : வீடியோக்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு

சமந்தா பற்றி அமைச்சர் சுரேகா பேச்சு : வீடியோக்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு

தெலங்கானா மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருப்பவர் கொண்டா சுரேகா. சமீபத்தில் பாரதீய ராஷ்டிர சமீதி செயல் தலைவர் கேடி ராமராவ் பற்றி அவதூறு பேச்சொன்றை வெளியிட்டார். அதில் நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யா ஆகியோரது விவாகரத்துக்கு கேடிஆர் தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த விவகாரம் அரசியல் வட்டாரம் மற்றும் சினிமா வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமந்தா, நாகசைதன்யாவின் அப்பா நாகார்ஜூனா மற்றும் பல தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதன்பின் தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். நடிகர் நாகார்ஜூனா அவர் மீது 100 கோடி கிரிமினல் அவதூறு வழக்கையும், கேடிஆர் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டும் வழக்கு தொடர்ந்தார்.

ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வழக்கு வந்தது. அமைச்சருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது. அமைச்சராக இருப்பவர் இப்படி பேசுவது மிகவும் தவறானது என்று கூறியது. அதோடு அவரது சமூக வலைத்தளப் பதிவுகளையும், மேலும் யு டியுப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள இந்த விவகாரத்தின் சுரேகாவின் அவதூறு பேச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது அனைத்து செய்தி நிறுவனங்கள், டிவி நிறுவனங்கள், இணையதளங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !