நடிப்பில் 50 வருடங்கள், சிரஞ்சீவி பகிர்ந்த கல்லூரி புகைப்படம்
 
தெலுங்குத் திரையுலகத்தில் சீனியர் கதாநாயகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்று பின்பு நடிகரானவர். தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த '47 நாட்கள்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர். ரஜினிகாந்த் நடித்து அதே ஆண்டில் வெளிவந்த 'ராணுவ வீரன்' படத்தில் வில்லனாகவும் நடித்தவர். 150 படங்களுக்கும் மேல் நடித்து நடிப்பில் தற்போது 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.
அதைக் குறிக்கும் விதத்தில் 1974--75ம் ஆண்டில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்த போது நாடகத்தில் முதன் முதலில் நடித்த போது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “ராஜினாமா”....நர்சபூர் ஒய்என்எம் கல்லூரியில் மேடையில் முதல் நாடகம்….கோனா கோவிந்தராவ் எழுதியது… நடிகராக முதல் அங்கீகாரம்.. அதுவும் சிறந்த நடிகராக… முடிவில்லாத ஊக்கம்... 1974 -2024… 50 வருட நடிப்பு… தீராத மகிழ்ச்சி,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
தெலுங்கில் பல வசூல் சாதனைகளைப் படைத்தவர் சிரஞ்சீவி. பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றவர். 2022ம் ஆண்டு நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த சினிமா சாதனையாளர் என கவுரவிக்கப்பட்டவர். அவருக்குப் பின் அவரது தம்பிகள், தம்பி மகன்கள், மகள்கள், அவருடைய மகன் என வாரிசுகள் பலரும் திரையுலகில் அறிமுகமாகி தெலுங்குத் திரையுலகத்தில் முக்கிய இடத்தில் உள்ளனர்.