திருமண பந்தத்தில் இணையும் அஞ்சு குரியன் ; நிச்சயதார்த்தம் முடிந்தது
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய ‛நேரம்' படத்தில் நிவின்பாலியின் தங்கையாகவும் அதன் பிறகு ‛ஓம் சாந்தி ஒசானா' படத்தில் அவரது தோழியாகவும் நடித்தவர் நடிகை அஞ்சு குரியன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் திலீப், அர்ஜுன் இணைந்து நடித்த ஜாக் டேனியல் படத்திலும் அதிரடி கதாநாயகியாக நடித்திருந்தார். சென்னையிலேயே படித்து வளர்ந்த இவர் தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் கூட ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கே ஸ்கை டைவிங் சாகசம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் அஞ்சு குரியன். இவருக்கும் ரோஷன் என்பவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றுள்ளது. மணமகனை பற்றிய அதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சு குரியன்.
மேலும் இது குறித்து தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தும்போது, “எண்ணிக்கையற்ற ஆசிர்வாதங்கள் என்னை இந்த தருணத்திற்காக வழி நடத்தியதற்காக கடவுளுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருப்பேன். இந்த பயணம் கலகலப்பும் காதலும் நிறைந்ததாக ஒரு அதிசயத்திற்கு எந்த வித குறைவும் இல்லாததாக அமைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.