சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர்
மலையாளத்தில் 80 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை மலையாள சினிமாவில் கலக்கி வரும் நடிகர் இந்திரன்ஸ். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள சினிமாவில் பெரிதளவில் பேசப்பட்ட படங்களான 2018, ஹோம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
தமிழில் ஆடும் கூத்து, நண்பன் என இரு படங்களில் மட்டும் நடித்துள்ளார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார் இந்திரன்ஸ். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45வது படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே த்ரிஷா, சுவாசிகா, நட்ராஜ் ஆகியோரை தொடர்ந்து இப்போது இந்திரன்ஸ் இணைந்துள்ளார் என்கிறார்கள்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.