'இந்தியன் 3' பஞ்சாயத்து : சிக்கலில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்'
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த படம் 'இந்தியன் 2'. படம் ஆரம்பமானது முதல் வெளியானது வரை இந்தப் படம் பல சிக்கல்களை சந்தித்தது. கிரேன் விழுந்து மூவர் மரணம், தயாரிப்பாளர் - இயக்குனர் நீதிமன்ற வழக்கு ஆகியவற்றை சந்தித்து ஒருவழியாக திரைக்கு வந்தது. யாரும் எதிர்பாராத விதத்தில் படம் தோல்வியை சந்தித்தது.
அப்படத்தின் மூன்றாவது பாகம் 'இந்தியன் 3' என 2025ம் ஆண்டு வெளிவரும் என்றார்கள். தற்போது இந்த மூன்றாம் பாகத்தை முடித்துக் கொடுக்க ஷங்கர் தரப்பில் 60 கோடி வரை சம்பளம் கேட்பதாக ஒரு தகவல். மேலும் படத்தை முடிக்க இன்னும் ஒரு பாடலை அதிக செலவில் எடுக்க வேண்டும் என்கிறாராம்.
கேட்ட சம்பளம் தந்தால் படத்தை முடித்துத் தருகிறேன், இல்லையென்றால் அடுத்த படத்திற்கப் போய்விடுவேன் என்கிறாராம்.
'இந்தியன் 2' தயாராகி வந்த போது, இப்படித்தான் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கப் போய்விட்டார். பின்னர், நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தரப்பு வழக்கு தொடர்ந்த பின்தான் வந்து முடித்துக் கொடுத்தார்.
ஷங்கர் விவகாரம் குறித்து தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய சங்கங்களில் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளதாம். திட்டமிட்டபடி 'இந்தியன் 3' படத்தை முடித்துக் கொடுக்கவில்லை என்றால் ஷங்கர் இயக்கி பொங்கலுக்கு வெளியாக உள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை தமிழகத்தில் வெளியிட ஒத்துழைக்க மாட்டோம் என சங்கங்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
'இந்தியன் 3' படம் மீண்டும் வழக்குகளில் சிக்குமா, 'கேம் சேஞ்சர்' படம் தமிழகத்தில் வெளியாகுமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.