உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சிவனாக நடித்த எம்ஜிஆர்

பிளாஷ்பேக் : சிவனாக நடித்த எம்ஜிஆர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் பிற்காலத்தில் புராண கதாபாத்திரங்களில் நடித்தில்லை. ஆனால் அவரது ஆரம்பகால படங்களில் இந்திரன், நாரதன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் நடித்ததிலேயே அதிக காட்சிகள் கொண்ட பெரிய கதாபாத்திரம் 'தாசி பெண்' என்ற படத்தில் அவர் நடித்த சிவன் கேரக்டர்.

பம்மல் சம்பந்த முதலியார் எழுதி நாடகமாக நடத்தப்பட்டு வந்த 'தாசி பெண்' என்ற கதை திரைப்படமானது. இந்த படத்திற்கு தாசி பெண், தும்பை மகாத்மியம், ஜோதிமலர், டான்சிங் கேர்ள் என 4 தலைப்புகள் வைக்கப்பட்டது. எல்லீஸ் டங்கன் இயக்கினார்.

சிவன் மீது மிகுந்த பக்தி கொண்ட ஒரு அழகான பெண் தேவதாசியாக மாறி கோவிலில் சிவனுக்கு பணிவிடையை செய்ய விரும்புகிறாள். ஆனால் அந்த அழகான பெண்ணை அந்த ஊர் பண்ணையார் தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள துடிக்கிறார். இதனால் பல துன்பங்களுக்கு ஆளாகும் அந்த பெண்ணை சிவன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. கடைசியில் அந்த பெண்ணை தும்பை பூவாக மாற்றி தனக்கு அந்த பூவை கொண்டுதான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் நியமனம் செய்தார் என்பதுதான் படத்தின் கதை.

இதில் எம்.ஆர்.சந்தானலட்சுமி, எம்ஜிஆர், டி.ஆர்.மகாலிங்கம் உள்ளிட்டோர் நடித்தனர். அந்த காலத்தில் குறைந்தது 16 ரீல் படங்கள் வந்து கொண்டிருந்தபோது இந்த படம் 13 ரீல் படமாக இருந்தது. இதனால் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடித்த 'கிழட்டு மாப்பிள்ளை' என்ற காமெடி குறும்படம் இணைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !