கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ?
100 கோடி, 200 கோடி, 500 கோடி, 1000 கோடி வசூல் என கடந்த சில வருடங்களாக இந்திய அளவில் சில பல படங்களின் வசூல் விவரங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் எது உண்மை, எது பொய் என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் 'டிராக்கர்கள்' என சொல்லிக் கொண்டு பலரும் பல்வேறு விதமான பொய்த் தகவல்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், ரசிகர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. சமயங்களில் குறிப்பிட்ட படத்தின் தயாரிப்பாளர் சொல்லும் வசூல் கூட பொய்யான தகவல் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கெல்லாம் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் சொன்னால் கூட நம்பலாம். அந்த விதத்தில் மலையாள சினிமா உலகில் கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மலையாளப் படங்களின் வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது..
கடந்த மார்ச் மாதத்தில் வெளியான படங்களின் பட்ஜெட், அதன் மூலம் கிடைத்த பங்குத் தொகை ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி மோகன்லால் நடித்து வெளிவந்த 'எம்புரான்' படம் 175 கோடியே 66 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும், அதன் மூலம் முதல் 5 நாட்களில் 24 கோடியே 65 லட்சம் பங்குத் தொகை கிடைத்தது என்ற விவரமும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட 15 படங்களின் பட்ஜெட், பங்குத் தொகையில் இதுதான் அதிகமானது.
இது போன்ற விவரத்தை தமிழ்த் திரையுலகத்திலும் அளித்தால் தேவையற்ற சண்டைகள், சர்ச்சைகள் வருவது நின்று போகும். செய்வார்களா ?.