18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் 'சோட்டா மும்பை'
மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'எம்புரான்' மார்ச் மாதத்திலும், 'தொடரும்' படம் ஏப்ரல் மாதத்திலும் என மாதத்திற்கு ஒரு படம் வெளியாகி வசூலையும் வாரி குவித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான 'தொடரும்' படத்திற்கு, 'எம்புரான்' படத்தை விட, குடும்ப ரசிகர்கள் அதிக அளவில் படையெடுத்து வருகிறார்கள். இப்படி மோகன்லாலின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தாலும் கூட இதுவும் போதாது என்று அடுத்த மாதம் அவரது சூப்பர்ஹிட் படமான 'சோட்டா மும்பை' படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். வரும் மே 21ம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2007ல் சரியாக இதே ஏப்ரல் 6ம் தேதி இந்த படம் வெளியானது. தற்போது 18 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. மம்முட்டி நடித்த 'ராஜமாணிக்கம்' என்கிற படத்தின் மூலம் முதல் படத்திலேயே வெற்றிப்பட இயக்குனராக அறிமுகமான அன்வர் ரஷீத் இந்த படத்தை தனது இரண்டாவது படமாக இயக்கி இருந்தார். பாவனா கதாநாயகியாக நடித்திருந்தார். மறைந்த நடிகர்கள் கலாபவன் மணி, கொச்சின் ஹனிபா, சித்திக், இந்திரஜித், ஜெகதி ஸ்ரீகுமார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.