ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சிம்ரன். திருமணம், குழந்தை என சிலகாலம் சினிமாவை விட்டு விலகியவர் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார். அவரது மகன் டீன்-ஏஜ் வயதில் உள்ளார். சில ஆண்டுகளாக முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் உடன் அவர் நடிப்பில் வெளிவந்த ‛டூரிஸ்ட் பேமிலி' படம் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் ஹிட் அடித்தது. 5 வாரங்களை கடந்து தற்போதும் தியேட்டர்களில் இப்படம் ஓடுகிறது. சசிகுமார், சிம்ரன் என படத்தில் நடித்த ஒவ்வொருவரின் நடிப்பும் பாராட்டை பெற்று வருகிறது.
இந்த வெற்றி தொடர்பாக சிம்ரனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அளித்த பேட்டி : ‛‛பொதுவாக என் கேரக்டருக்கு கிரெடிட் வரணும் என்று நினைப்பேன். இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தபோது ரசிகர்கள் தந்த ஆதரவை பார்த்து நெகிழ்ந்து போனேன். எந்த படம் பண்ணினாலும் ரசிகர்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இந்த படத்தின் கதை நன்றாக இருந்ததால் வெற்றி பெற்றது. நான் ஒரு படத்தில் நடிக்கும்போது பெரிய ஹீரோ, பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். கதையையும், என் கேரக்டரையும் தான் பார்ப்பேன். இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லும்போதே வெற்றி பெறும் என தோன்றியது. என்னிடம் கதையை எப்படி சுவாரஸ்யமாக சொன்னாரோ அப்படியே படத்தையும் இயக்குனர் எடுத்துள்ளார். எல்லோரும் தியேட்டரில் சிரிக்குறாங்க, அழறாங்க, எமோஷனலாக பீல் பண்றதை பார்க்க முடிந்தது. இந்த காலத்தில் நடக்கும் நிகழ்வுகளின் உண்மை தான் இந்த படம்'' என்றார்.