பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர்
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் '3 பிஹெச்கே'. படத்தின் வெளியீட்டிற்குப் பிறகும் இப்படத்தை புரமோஷன் செய்ய படக்குழுவினர் தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள் சிலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து வரும் படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ், படத்தில் பின்னணிக் குரல் கொடுத்துள்ள நடிகர் கார்த்திக்கு தனி பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
“எங்களது 3 பிஹெச்கே படத்திற்கு பின்னணி குரல் மூலம் கதை சொல்பவராக இருந்ததற்கு நன்றி கார்த்தி சார். உங்கள் குரல் எங்கள் படத்திற்கு மிகுந்த சக்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். நீங்கள் ஸ்டுடியோவில் இருந்தீர்கள். வீடியோ அழைப்பில் என்னுடன் பேசி, எங்கள் படத்திற்கு டப்பிங் செய்தீர்கள். நீங்கள் மிகவும் அன்பாக இருந்ததை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.