ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத்
அனிருத் உலகம் முழுவதும் நடத்திய இசை நிகழ்ச்சியின் தொகுப்பாக 'ஹூக்கும்' என்ற இசை நிகழ்ச்சியை கடந்த 26ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருவிடந்தை என்ற இடத்தில் நடப்பதாக அறிவித்திருந்தார். இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி சாதனை படைத்தது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி தரவில்லை. இதனால் நிகழ்ச்சியை ரத்து செய்த அனிருத், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி 'இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் நடைபெறுகிறது' என்று அறிவித்துள்ளார்.
'இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி - இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும்' என்றும் தெரிவித்துள்ளார்.