குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர்
குற்றம் கடிதல் என்ற திருக்குறளின் வார்த்தைக்கு குற்றத்தை நீக்குதல் என அர்த்தம். பிரம்மா இயக்கத்தில் 2015ம் ஆண்டு குற்றம் கடிதல் என்ற படம் வெளியானது. ஒரு டீச்சர், ஒரு அம்மா, ஒரு மாணவன் இடையே கதை நகரும். அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. பிரசித்தா, பாவெல், மாஸ்டர் அஜய் உள்ளிட்டோர் நடித்தனர். ஜே.எஸ்.கே. பிலிம் கார்பரேஷன் தயாரித்தது. இப்போது குற்றம் கடிதல் 2 படத்தை அதே நிறுவனம் தயாரிக்கிறது.
'புதுமைப்பித்தன்', 'லவ்லி' படங்களை இயக்கி, 'அநீதி', 'தலைமை செயலகம்' போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.கே.ஜீவா இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதையானது, ஓய்வு பெற இருக்கும் 60 வயது நிரம்பிய பள்ளி ஆசிரியர் பின்னணியில் நகர்கிறது. மத்திய அரசாங்கம் “நல்லாசிரியர்” விருதை அவருக்கு அறிவிக்கிறது. அதனைத் தொடர்ந்து, அவர் வாழ்கையில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெறுகிறது.
இச்சம்பவங்களை எவ்வாறு எதிர் கொள்கிறார்? அந்த சம்பவம் என்ன? என்பது போன்ற அடுக்கடுகான திருப்பங்களுடன் ஒரு வலுவான கிளைமாக்ஸ் காட்சியுடன் படம் செல்கிறதாம். திரில்லர் டிராமா பாணியில் உருவாகும் இந்த படத்தில் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பிஎல் தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திர சேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் ரோஷன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.