உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி

தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி


2023ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் ஆக.,1ல் அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ‛பார்க்கிங்' திரைப்படம் மொத்தம் மூன்று தேசிய விருதுகளை வென்றிருந்தன. ‛வாத்தி' படத்துக்கு இசையமைத்தற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜிவி பிரகாஷ் பெற்றிருந்தார். இது அவருக்கு இரண்டாவது தேசிய விருது.

இந்த நிலையில் விருதுகளை தேர்வு செய்யும் ஜூரிகள் குழுவில் ‛தூங்காநகரம், சிகரம் தொடு' படங்களை இயக்கிய கவுரவ் நாராயணனும் இடம்பெற்றிருந்த தகவலை விருதுகள் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது. சத்யநாராயணன் எனும் இயற்பெயரை கொண்ட அவர் சினிமாவுக்காக கவுரவ் நாராயணன் என குறிப்பிட்டு வருகிறார்.

அவரிடம் எக்ஸ்க்ளூசிவாக நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛தேசிய விருதுகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும். தென்னிந்திய பிரிவில் 2 பேனல்கள் இருக்கும். முதல் பேனலில் மலையாளம், தமிழ் மொழிப்படங்களும், 2வது பேனலில் கர்நாடகம், தெலுங்கு படங்களும் இருக்கும். தென்னிந்திய பிரிவில் உள்ள பேனல் 1ல் தான் ஒட்டுமொத்தத்தில் அதிக படங்கள் வரும். அபிஜித் சிரிஷ் தேஷ்பாண்டே தலைமையிலான இந்த பேனலில் நான், சி.டி.மனோஜ், அபர்ணா சிங், எஸ். ராஜசேகரன் என 5 ஜூரிஸ் இடம்பெற்றிருந்தோம். சுமார் 40 நாட்கள் டில்லியில் தங்கி 90க்கும் மேற்பட்ட படங்களை பார்த்து தேர்வு செய்தோம். நாங்கள் தேர்வு செய்த படங்களை அடுத்ததாக சென்ட்ரல் ஜூரிகள் பார்த்து முடிவு செய்வர்.

ஜூரிகளான எங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. நாங்கள் தேர்வு ஆனதை எங்கள் குடும்பத்தினருக்கு கூட தெரிவிக்க கூடாது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, யாருக்கும் போனில் பேசக்கூடாது, போனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். ஜூரிகள் தொடர்பாகவோ, விருதுகள் தொடர்பாகவோ எந்தவொரு போட்டோவும் கூட பகிரக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருக்கும்'' என மனம் திறந்து பேசியுள்ளார் கவுரவ் நாராயணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !