உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக்

இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக்


இந்தியத் திரையுலகத்தில் அதிக வருவாயை ஈட்டித் தரும் தெலுங்குத் திரையுலகத்தில் திரைப்பட ஊழியர்கள் ஸ்டிரைக் இரண்டாவது வாரமாக நீடிக்கிறது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி கடந்த வாரம் முதல் எந்த படப்பிடிப்புக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தெலுங்கு திரைப்பட ஊழியர் சம்மேளனம் அறிவித்து ஸ்டிரைக்கை ஆரம்பித்தது.

கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு கூட போராட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான திரைப்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் தரப்பில் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது குறிப்பிட்ட சதவீத உயர்வு, அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு மீதி சதவீத உயர்வு என 30 சதவீத உயர்வை பிரித்துத் தருவதாகப் பேசியுள்ளார்கள். ஆனால், அதை ஊழியர்கள் தரப்பில் ஏற்கவில்லை என்கிறார்கள்.

நடிகர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் கொட்டித் தரும் தயாரிப்பாளர்கள் ஊழியர்களுக்கு சில நூறு ரூபாய் உயர்த்தித் தர மறுக்கிறார்கள் என ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். ஸ்டிரைக் இன்னும் நீடிக்கும் பட்சத்தில் அது அடுத்து வெளிவர உள்ள படங்களின் வெளியீட்டை பாதிக்கும் நிலை உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !