உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு

இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு

சென்னையில் நடந்த கமாண்டோவின் லவ் ஸ்டோரி பட விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் பல புது விஷயங்களை பேசியுள்ளார். குறிப்பாக, இளையராஜா, வைரமுத்து பிரிவு குறித்து பல புது தகவல்களை சொன்னார்.

அவர் பேசியது... ''பொதுவாக கமல்ஹாசன் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம், ஆனால் அவர் இப்போது எம்பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார் என்று இந்த விழா மேடையிலேயே அந்த பட அரவிந்தராஜிடம் கூறினார்.

நானும் ஒரு தகவல் சொல்கிறேன். ‛ஹே ராம்' படத்தில் புதுவிதமான பாட்டு உருவாகுவதற்கு நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமல்ஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது என யோசிக்கிறேன். இப்போதும் நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன்

ஒரு காலத்தில் 10 ஆண்டுகள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா. அந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் வைரமுத்து பேசும்போதெல்லாம், ‛‛இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம், என் பாடலே காரணம்'' என்று கூறி வந்தார். இதைக் கேள்விப்பட்டு நான் அண்ணன் இளையராஜாவிடம் சொன்ன போதும், அவர் நம்பவில்லை. பின்னர், ஆதாரப்பூர்வமாக அதை அறிந்து கொண்டார். அப்புறம்தான் இளையராஜாவுக்கும், வைரமுத்துக்கும் விரிசல் ஏற்பட்டது. இளையராஜாவுக்கும் வைரமுத்துவிற்கும் விரிசல் ஏற்பட முக்கிய காரணமே, 'இளையராஜா என்னால் தான் வளர்கிறார் என்று வைரமுத்து வெளி மேடைகளில் பேசியது தான்' என்றார் கங்கை அமரன்.

இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !