பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன்
வளர்ந்து வரும் நடிகராக துணை கதாபாத்திரங்கள் ஏற்று எம் ஜி ஆர் நடித்து வந்த 1940களில், நடிகர் பி யு சின்னப்பா கதாநாயகனாக நடிக்க இருந்த “ரத்னகுமார்” திரைப்படத்தின் படப்பிற்கான வேலைகள் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தபோது, படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்த இரட்டை இயக்குனர்களில் பெரியவரான இயக்குநர் கிருஷ்ணனிடம் அந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டிருக்கின்றார் எம் ஜி ஆர்.
மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம் ஏதும் இல்லையே என இயக்குநர் கிருஷ்ணன் கூற, பெரியவர் இயக்கும் படத்தில் எனக்கு வேஷம் ஏதும் இல்லாமலா? என உரிமையோடு எம் ஜி ஆர் கேட்க, பின் எம் ஜி ஆருக்காகவே அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கின்றார் இயக்குநர் கிருஷ்ணன். நடிகர் கே பி கேசவன் மந்திரியாகவும், அவருக்காக சதிவேலை செய்யும் அவரது கையாளாக எம் ஜி ஆரை நடிக்க வைத்திருக்கின்றார் இயக்குநர் கிருஷ்ணன்.
“ரத்னகுமார்” படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, அதிர்ஷ்டவசமாக எம் ஜி ஆருக்கு “மருதநாட்டு இளவரசி” என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, வந்திருக்கும் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை இழக்க விரும்பாத எம் ஜி ஆர், இயக்குநர் கிருஷ்ணனிடம் சென்று, என் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்து விடுங்கள். நான் “மருதநாட்டு இளவரசி” திரைப்படத்திற்காக மைசூர் செல்ல வேண்டியிருக்கிறது என்று நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றார் எம் ஜி ஆர்.
“ரத்னகுமார்” படப்பிடிப்புத் தளத்தில் இருந்த படத்தின் நாயகன் பி யு சின்னப்பாவை வைத்துக் கொண்டு இவருக்கு முதல் ஷாட் வைத்தால் அவர் கோபித்துக் கொள்வார் என எண்ணிய இயக்குநர் கிருஷ்ணன், எம் ஜி ஆரை தனியாக அழைத்துச் சென்று, மேகம் போல் வரையப்பட்டிருந்த ஒரு படுதாவின் முன் நிற்க வைத்து, இரண்டு, மூன்று க்ளோஸ் அப் ஷாட் எடுத்துக் கொண்டு, எம் ஜி ஆரை “மருதநாட்டு இளவரசி” படப்பிடிப்பிற்காக மைசூருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.
“நம் சந்திப்பை அந்த சந்திரன் கூட பார்க்கின்றான்” என “ரத்னகுமார்” படத்தில் பி யு சின்னப்பா தன் காதலியான நடிகை மாலதியிடம் சொல்வது போல் காட்சி ஒன்று வர, உடனே எம் ஜி ஆர் அவர்கள் இருவரையும் பார்ப்பதுபோல் படத்தில் காட்டப்படும். எம் ஜி ஆர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமலேயே முன்பு எடுத்திருந்த க்ளோஸப் ஷாட்களை வைத்து, அக்காட்சியோடு இணைத்து படமாக்கியிருந்தார் இயக்குநர் கிருஷ்ணன். இவரது சமயோஜித புத்தியைப் பாராட்டி எம் ஜி ஆர், இயக்குநர் கிருஷ்ணனை ஆரத் தழுவிக் கொண்டதோடு, 'மக்கள் மனதில் என் முகம் பதியும்படி செய்துவிட்டீர்களே' என பாராட்டியுமிருக்கின்றார். இந்த இருவரது நட்பும், பிரியமும் அவர்களது இறுதிக் காலம்வரை நீடித்துமிருந்தது என்பதுதான் உண்மை.