பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா
பழம்பெரும் நடிகையான சந்திரகாந்தா துணிச்சலுக்கு புகழ்பெற்றவர். வில்லியாக, ஊனமுன்ற பெண்ணாக எந்த வேடத்திலும் துணிச்சலாக நடிப்பவர்.
1958ம் ஆண்டு வெளியான 'மாயமனிதன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சந்திரகாந்தா. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமயிலாடி என்ற கிராமம்தான் சந்திரகாந்தாவின் பிறந்த ஊர். சிறு வயது முதலே நடனத்தில் சந்திரகாந்தாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. 9ம் வகுப்பு படித்து முடித்திருந்த சந்திரகாந்தா, பள்ளி விடுமுறைக்குத் சென்னையில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு வந்தார்.
அந்த வீட்டுக்கு விருந்தினராக வந்த நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி, அங்கே நடனமாடிக்கொண்டிருந்த சந்திரகாந்தாவை பார்த்தார். அவரை தன் நாடகங்களில் நாயகி ஆக்கினார். 15 வயதில் தொடங்கி நாடகங்களில் நடித்துச் சிறந்த நாடக நடிகையாகப் புகழ்பெற்றார்.
அதன்பிறகு 'விஜயபுரி வீரன்' படத்தை இயக்கிய ஜோசப் தளியத் அந்த படத்தில் சந்திரகாந்தாவை இரண்டாவது நாயகி ஆக்கினார். இந்தப் படத்தில் சாந்தியாக நடித்து கதாநாயகியைவிடப் புகழ்பெற்றார் சந்திரகாந்தா.
அடுத்து கே.சங்கர் இயக்கத்தில் 1963ல் வெளியான 'இது சத்தியம்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதோடு 'நீயும் விலகிக் கொள் அடுத்த படத்தில் நாம் ஜோடியாக நடிக்கலாம், வேறு நடிகருடன் நடித்தால் உனக்கு பெரிய வளர்ச்சி இருக்காது' என்று எம்ஜிஆர் சொன்னார். ஆனால் அதை சந்திரகாந்தா ஏற்கவில்லை. 'நான் ஒப்பந்தத்தை மீற மாட்டேன்' என்று கூறி அந்த படத்தில் அசோகனுக்கு ஜோடியாக நடித்தார்.
முத்துராமன் ஜோடியாக 'முத்து மண்டபம்' படத்தில் நாயகியாகவும், வில்லியாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார். பீம்சிங் இயக்கத்தில் வெளியான 'பந்தபாசம்' படத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணத்துக்காக ஏங்கும் மாற்றுத் திறனாளிப் பெண்ணாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். 'தெய்வத் திருமகள்' படத்தில் மீண்டும் மாற்றுத் திறனாளியாக நடித்துக் கவர்ந்த சந்திரகாந்தா, 'துளிசிமாடம்' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார்.
இப்படி சினிமாவில் துணிச்சலாக நடித்த சந்திரகாந்தா மொத்தம் நடித்ததே 30 படங்கள்தான். பின்னர் புதிய தலைமுறை சினிமாவிற்கு வரவே சினிமாவில் இருந்து விலகி நாடகங்களை நடத்தினார்.