உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி

பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி


1950களில் புராண படங்கள் வெளிவந்த அளவிற்கு சமூக படங்களும், தமிழ் இதிகாச படங்களும் வரத் தொடங்கின. அந்த வரிசையில் தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'வளையாபதி'யும் திரைப்படமானது. வளையாபதி காப்பியத்தின் பெரும் பகுதி கிடைக்கவில்லை. அதனால் இருந்த பகுதியோடு சிலவற்றை கற்பனையாக சேர்த்து இந்த படம் உருவானது. மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரித்து இயக்கினார். பாரதிதாசன் வசனம் எழுதினார். எஸ்.தட்சினா மூர்த்தி இசை அமைத்தார்.

இந்த படத்தின் கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தபோது 'பராசக்தி' படத்தில் தங்கை கல்யாணியாக நடிக்க அப்போது ஆந்திராவில் இருந்து வாய்ப்பு தேடி வந்திருந்த சவுகார் ஜானகி முடிவு செய்யப்பட்டிருந்தார்.

இதை கேள்விப்பட்ட சுந்தரம் சவுகார் ஜானகியை அணுகினார். 'பராசக்தி'யில் தங்கை வேடம், 'வளையாபதி'யில் நாயகி வேடம். இதனால் நாயகி வேடத்தையே தேர்வு செய்தார் சவுகார் ஜானகி. சுத்தமாக தமிழ் பேசத் தெரியாத சவுகார் ஜானகி தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதி வைத்து அதனை மனப்பாடம் செய்து பேசி நடித்தார்.

பராசக்தி படமும், வளையாபதி படமும் ஒரே நேரத்தில் வெளியானது. பராசக்தி அசுர வெற்றிக்கு முன்னால் வளையாபதியால் தாக்குபிடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. முதல் படமே தோல்வி அடைந்ததாலும், தனது தவறான முடிவாலும் பெரும் வேதனை அடைந்தார் சவுகார் ஜானகி, பின்னர் பராசக்தி படத்தில் முன்பு வாய்ப்பு தருவதாக சொன்ன கிருஷ்ணன்-பஞ்சுவின் ஆதரவால் மற்ற படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்தார் சவுகார் ஜானகி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !