சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'கூலி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக அல்லது அவருக்கு இணையாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் வில்லனாக நடித்த மலையாள நடிகர் சவுபின் சாஹிர். இவர் ஏற்கனவே கடந்த வருடம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் கடந்த செப்.,5ம் தேதி துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு சவுபின் சாஹிர் கிளம்பு தயாரானபோது அவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் துபாய் செல்ல அனுமதி மறுத்தது.
இதற்கு காரணம் மஞ்சும்மேல் பாய்ஸ் பட தயாரிப்பின் போது தயாரிப்பாளர் சிராஜ் வலையதாரா என்பவர் அந்த படத்தின் தயாரிப்புக்காக 7 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படம் வெளியான பிறகு லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக சொன்ன படத்தின் தயாரிப்பாளரான சவுபின் சாஹிர், தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கு காரணமாக தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சவுபின் சாஹிருக்கு துபாய் செல்ல அனுமதி மறுத்தது.
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலைகள் தனக்கு வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உரிய அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.