‛லப்பர் பந்து' வெளியான அதே நாளில் அடுத்த படத்தை அறிவித்த இயக்குனர்!
கடந்த ஆண்டில் செப்.,20ல் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வெளியான படம் 'லப்பர் பந்து'. லப்பர் பந்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி அதை சுற்றி நடைபெறும் குடும்ப எமோஷனல் விஷயங்கள் குறித்து பேசிய படம். குறைந்த பொருட்செலவில் உருவான இந்த படம் வசூலை பல மடங்கு வாரி குவித்தது.
இந்த நிலையில் லப்பர் பந்து வெளியாகி ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை தமிழரசன் பச்சமுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாவது: நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா அசிஸ்டன்ட் இயக்குனர் ஆக முடியுமா?? அப்படி ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா?? பண்ணா கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ஓகே பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய இன்செக்யூரிட்டிகள் மற்றும் முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
முதல் காட்சி முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க.. இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல, எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு… ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும். இப்டி என்ன ஊக்குவித்து பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த அப்டேட்ட நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்! ஆமாங்க, என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்.. தனுஷ் சார் ரொம்ப நன்றி கதை சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு …நடிப்பு அசுரனுக்கு ஆக்ஷன், கட் சொல்ல காத்திருக்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.