கவுதம் கார்த்திக்கின் 'ரூட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்த '1947 ஆகஸ்ட் 14' திரைப்படம் வெளியானது. வரலாற்று பின்னணியில் உருவான இந்த படத்தை தொடர்ந்து தற்போது கவுதம் கார்த்திக் ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும் 'ரூட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூரிய பிரதாப் என்பவர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக பவ்யா ட்ரிக்கா நடிக்க பாலிவுட்டை சேர்ந்த அபர்சக்தி குரானா என்பவர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழுக்கு வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் தான் கவுதம் கார்த்திக் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கி அதையும் விரைவாக ரூட் குழுவினர்கள் முடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.