துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப்
கடந்த சில வாரங்களில் ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பிக்பாஸ் புதிய சீசன் நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. ஹிந்தியில் சல்மான்கான், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் என ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களே இந்த புதிய சீசன்களையும் நடத்தி வருகின்றனர். அதேபோல தமிழில் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதியில் இருந்து பிக்பாஸ் சீசன் 8 துவங்க இருக்கிறது. இதை விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என தெரிகிறது.
கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமை 19 போட்டியாளர்களுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் கடந்த வருடமே அவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலக முடிவு எடுத்து விட்டதாகவும் திரையுலகில் மற்றும் இன்னும் சில பணிகளில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார்.
அதேசமயம் பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விட்டு அதிலிருந்து விடை பெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாகவே கூறியிருந்தார். அதனால் இந்த 12வது சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்கிற கேள்வி கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் சேனல் நிர்வாகத்திற்கும் சுதீப்பிற்கும் ஏற்பட்ட சுமுக உடன்படிக்கை காரணமாக தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு இந்த 12வது சீசனையும் கிச்சா சுதீப் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டாராம்.