தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்துள்ளார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' மற்றும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ஆகியவை தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டன.
ஒரே நாயகன் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதோ, அடுத்தடுத்த சில நாட்களில் வெளியாவதோ தமிழ் சினிமாவில் பல வருடங்களாகத் தவிர்க்கப்பட்டு வருகிறது.
'டியூட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ஆகிய இரண்டில் எந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும், எது தள்ளிப் போகும் என்பது கேள்வியாகவே இருந்தது. இந்நிலையில் இரண்டு படங்களின் நாயகன் பிரதீப் ரங்கநாதன், தீபாவளிக்கு 'டியூட்' வருவதை உறுதி செய்யும் விதமாக, “டியூட் தீபாவளி, மாதம் ஆரம்பம்” என்று பதிவிட்டுள்ளார். இதனால், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் தள்ளிப் போகும் என்பது உறுதியாகி உள்ளது.
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை முதலில் செப்டம்பர் 18 வெளியிடுவதாக அறிவித்தார்கள். பின்னர் அத்தேதியில் வெளியிடாமல் 'அக்டோபர் 17' வெளியிடுவதாக அறிவித்தார்கள். இப்போது மீண்டும் தள்ளி வைப்பதாக அறிவிப்பு விரைவில் வரலாம்.
இருந்தாலும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் அறிமுக வீடியோ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது உண்மை. அந்த அளவிற்கு 'டியூட்' படத்திற்கு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.