5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி
கடந்த 2020ல் பாலிவுட் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் உள்ளதாக பலர் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள். இவர் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறி அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சுஷாந்த்துக்கு போதைப் பொருள் வரவழைத்து கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருட சிறைவாசத்திற்கு பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நான்கு வருடங்களில் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.
அவர் மீது வழக்கு இருந்ததால் அவர் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்று கூறி அவரது பாஸ்போர்ட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரியா சக்கரவர்த்தி வசம் அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து தனது சோசியல் மீடியாவில் ரியா வெளியிட்டுள்ள பதிவில், “கணக்கற்ற போராட்டங்கள்.. முடிவற்ற நம்பிக்கை.. இவற்றை தொடர்ந்து இன்று என்னுடைய பாஸ்போர்ட் மீண்டும் எனது கைகளுக்கு வந்துள்ளது. சாப்டர் 2க்காக தயாராகிறேன். வாய்மையே வெல்லும்” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.