உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்'

3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்'

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளியான 'பாகுபலி 1', 2017ல் வெளியான 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து ஒரே படமாக 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் இந்த மாதம் 31ம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள்.

ஐமேக்ஸ், டால்பி விஷன், 4டிஎக்ஸ், டி பாக்ஸ், எபிக் ஆகிய திரையிடல் தொழில்நுட்பங்கள் உள்ள தியேட்டர்களிலும் இப்படம் வெளியாக உள்ளது. 'பாகுபலி' படங்கள் வெளியான போது இந்த நுட்பங்கள் கொண்ட தியேட்டர்கள் அதிகமாக இல்லை. ஆனால், இப்போது குறிப்பிடும்படியாக உள்ளன. எனவே அகன்ற திரைகளில் பார்க்கும் போது புது அனுபவம் கிடைக்கும்.

'பாகுபலி தி எபிக்' படம் 3 மணி நேரம் 40 நிமிடம் வரை இருக்கும் என அதன் தயாரிப்பாளர் ஷோபு எர்லகட்டா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முதல் பாகம் 'தி எபிக்' படத்தின் இடைவேளை வரையிலும், இரண்டாம் பாகம், இடைவேளைக்குப் பிறகான படமாகவும் இருக்குமாம். சில பாடல்கள், காட்சிகள் ஆகியவற்றை நீக்கி 'தி எபிக்' படத்தை மாற்றி அமைத்துள்ளார்கள். 'பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்' என்பது 'தி எபிக்' படத்தின் இடைவேளை காட்சியாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு பாகங்களை இணைத்து ஒரே பாகமாக மறு வெளியீடு செய்வது இந்தியத் திரையுலகத்தில் இதுதான் முதல் முறை. ரசிகர்கள் மீண்டும் படத்தைப் பார்த்து எந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்கு ஓரிரு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !