ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில்
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்துள்ள ‛டியூட்' படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.. 17ம் தேதி ரிலீஸாகிறது. சென்னையில் நடந்த டியூட் பிரஸ் மீட்டில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது : நான் நடித்த லவ்டுடே, டிராகன் படத்துக்குபின் டியூட் வருகிறது. அந்த படங்களை போல இதுவும் 100 கோடிக்கு மேல் வசூலித்தால் மகிழ்ச்சி. திருமணம், அதற்கு பின் நடக்கும் வாழ்க்கை, விட்டுக்கொடுப்பது, எது மகிழ்ச்சி உட்பட பல விஷயங்களை படம் பேசுகிறது. ஒரு முக்கியமான சமூக கருத்தும் படத்தில் உள்ளது. இன்றைய காலகட்டத்துக்கு தகுந்த கதை. முதலில் இயக்குனர் கீர்த்திஸ்வரன் கதை சொன்னார். பின்னர் இன்னொரு ஹீரோவை வைத்து இயக்குவதாக சொன்னார். பின்னர் மீண்டும் என்னிடம் வந்தார்.
கோமாளி படத்தில் எனக்கு இருந்த எனர்ஜி அவரிடம் இருந்தது. அவர் பெரிய இயக்குனர் ஆக வருவார். மமிதா பைஜூ குறும்படம், வேறு படங்கள் பார்த்து வியந்து இருக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. சாய் அபயங்கர் ஆல்பம் ஹிட்டானதால் அவரை புக் பண்ணினோம். இப்போது அவர் நிறைய படங்கள் இசையமைக்கிறார். எனக்கு பாடுகிற ஆர்வம் இருந்தது. இதில் ஒரு பாடலை என்னை பாட வைத்து இருக்கிறார்.
ரஜினி, கமல் இணையும் படம் உறுதி ஆகிவிட்டது. ஆனால் கதை, இயக்குனர் முடிவாகவில்லை என்கிறார்கள். என்னிடம் அந்த படத்துக்கு கதை இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பேன். அவர்கள் எவ்வளவு பெரிய ஸ்டார். அவர்களை இணைத்து படம் இயக்குவது சாதாரண விஷயமல்ல. நான் இப்போது நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகிறேன். தீபாவளிக்கு பல படங்கள் பார்த்து ரசித்து இருக்கிறேன். நான் நடித்த படம் இந்த ஆண்டு வருவது ரொம்ப மகிழ்ச்சி'' என்றார்.