'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து கடந்த 17ம் தேதி திரைக்கு வந்த படம் 'பைசன்'. இந்த படம் குறித்து தமிழக பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், 'மாரி செல்வராஜ் இயக்கி உள்ள பைசன் காளமாடன் படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான உணர்வு பூர்வமான படத்தை கொடுத்திருக்கிறார்.
ஒரு கிராமத்தைச் சார்ந்த இளைஞன் தன்னுடைய லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்னை, சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் பல காட்சிகளில் உணர்வு பூர்வமாக என்னையும் பொருத்திப் பார்க்க முடிந்தது. அர்ஜுனா விருது பெற்ற இந்திய கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மிக அற்புதமாக திரையில் கொடுத்திருக்கிறார்.
சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும் அந்த வேலியின் உயரத்தை தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மணத்தி கணேசன் வரலாற்றை மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ். இப்படத்தில் நடித்திருக்கும் துருவ் விக்ரம் அந்த கதாபாத்திரத்துக்காக தன்னையே அர்ப்பணித்துள்ளார். அண்ணன் பசுபதி, லால் ஆகியோரின் நடிப்பு திறன் குறித்து நான் புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைவருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் மாரி செல்வராஜ் மேலும் பல அற்புதமான திரைப்படங்களை தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும் ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையும், சமூகம் சார்ந்த அவரது இந்த திரைப்பயணம் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.