யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அங்கிருந்த யானை தந்தங்களை எடுத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த சமூகநல ஆர்வலர் ஜேம்ஸ் மாத்யூ என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கேரள அரசு யானை தந்தங்களை மோகன்லால் வைத்திருக்க உரிமம் வழங்கியிருப்பதாகவும், அது மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்து நடிகர் மோகன்லாலுக்கு யானை தந்தங்களை வைத்திருக்க உரிமம் வழங்கி இருந்தாலும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அது ஏற்புடையது அல்ல.
அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தால், அதனை முறைப்படி அரசாணையாக வெளியிட வேண்டும். அதை செய்ய தவறியதால், மாநில அரசு வழங்கிய இந்த உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் இந்த வழக்கு மோகன்லாலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.