உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள்

இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள்


தென்னிந்திய திரையுலகில் கன்னட சினிமாவை தவிர்த்து மற்ற மூன்று மொழிகளிலும் பிரபல ஹீரோக்கள் பல வருடங்களுக்கு முன்பு நடித்த ஹிட் படங்கள் அதிக அளவில் அவ்வப்போது செய்யப்பட்டு வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில் நாகார்ஜுனா நடிப்பில் கடந்த 36 வருடங்களுக்கு முன்பு வெளியான ‛சிவா' திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் நவம்பர் 14ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் அவரது முதல் படமாக இது வெளியானது. அவருக்கும் நாகார்ஜுனாவுக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவது குறித்து நடிகர் அல்லு அர்ஜுனும் தனது மகிழ்ச்சியை ஒரு வீடியோ மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “சிவா திரைப்படம் தெலுங்கு சினிமாவின் ஐகானிக் படம் மட்டுமல்ல.. அது இந்திய திரை உலகில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று. அந்த படத்திற்கு பிறகு தான் இந்திய மற்றும் தெலுங்கு சினிமாவின் போக்கே முழுவதுமாக மாறியது. அது மட்டுமல்ல தெலுங்கு சினிமாவுக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. ராம்கோபால் வர்மாவின் பார்வையும் நாகார்ஜுனாவின் அற்புதமான நடிப்பும் அந்தப் படத்தை இப்போது வரை ரசிகர்களிடம் எவர்கிரீன் கிளாசிக் படமாக நேசிக்க வைத்திருக்கின்றன. ரீ ரிலீஸ் தினத்தில் இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் தியேட்டர்களில் இந்த படத்தைக் கொண்டாடுவதற்காக இரண்டு லாரிகள் நிறைய காகிதங்களை அள்ளிக்கொண்டு வாருங்கள்” என்று ஜாலியாக ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !