லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி
தமிழில் கும்கி, ஜிகிர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். கொச்சி அருகே ஆலுவா நகரில் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு 24ம்தேதி எர்ணாகுளம் பானர்ஜி சாலையில் உள்ள மதுபாருக்கு லட்சுமி மேனன் தனது ஆண் நண்பர்களுடன் சென்றதாக தெரிகிறது. அங்கு ஆலுவாவை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஷா சலீம் என்பவர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அப்போது அவருக்கும், லட்சுமி மேனனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து ஷா சலீமை காரில் கடத்தி சென்று, வெடிமரா பகுதியில் வைத்து லட்சுமி மேனின் நண்பர்கள் தாக்கி உள்ளனர். இதுகுறித்து ஷா சலீம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், நடிகை லட்சுமி மேனன், அவரது நண்பர்கள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நடிகை லட்சுமி மேனன், தாக்கப்பட்ட ஷா சலீம் ஆகியோர் சமாதான பேச்சு மூலம் இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்து லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.