பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன்
பழம்பெரும் இயக்குனர் கே.விஜயனின் மகன் சுந்தர். சின்னத்திரையின் முன்னணி இயக்குனராக இருக்கிறார். குங்குமம், ஜன்னல், ஊஞ்சல், அண்ணாமலை, நிறங்கள், அலைகள், செல்வி, அரசி போன்றவை இவர் இயக்கிய முக்கியமான தொடர்கள்.
ஆனால் சினிமாவில் மிக இளம் வயதில் படம் இயக்கியவர் இவர். தனது 18வது வயதில் 'ரேவதி' என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து 'வெளிச்சம்', 'என்னருகே நீ இருந்தால்' படங்களை இயக்கினார். பிறகு சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.
தனது தந்தை இயக்கிய சட்டம், விதி, ஓசை, மங்கம்மா சபதம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். குறிப்பாக 'விடுதலை' படத்தில் ரஜினிகாந்தின் போர்ஷனை இயக்கியது இவர்தான்.
இவரது திறமையையும், உழைப்பையும் பார்த்த தயாரிப்பாளர் பாலாஜி. எனது அடுத்த படத்தை நீதான் இயக்க வேண்டும் என்றார். ஆனால் அவர் இயக்குனராக்குவதற்கு முன்பே மீரா பாலகோபாலன் என்பவர் அவரை இயக்குனராக்கி விட்டார். அந்த படம்தான் 'ரேவதி'.
ரேவதி படத்தில் ரேவதி, சுரேஷ், ஆனந்த் பாபு, ஜெய் சங்கர், சரத்பாபு, சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர். படம் போதிய வரவேற்பை பெறவில்லை.