தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த்
‛வானத்தை போல, அன்னம்' போன்ற தமிழ் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மான்யா ஆனந்த். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் என்கிற பெயரில் ஒருவர் என்னிடம் தவறாக பேசினார். அது அவரா அல்லது போலி நபரா என்று எனக்கு தெரியவில்லை என கூறினார். ஆனால், இந்த பேட்டி திரித்து, வலைதளங்களில் தனுஷ் மற்றும் அவரது ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு எதிராக பரவ தொடங்கியது. வலைதளவாசிகள் அவர்களை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதுபற்றி மான்யா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என பேட்டியை வைத்து தனுஷ் சாரை பற்றி பல சேனல்கள் தவறான தகவல்களைப் பரப்புவதை நான் கவனித்தேன். என்னை தொடர்பு கொண்ட நபர், ஸ்ரேயாஸ் என்று கூறிக்கொண்டு இருக்கும் ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாக குறிப்பிட்ட அசல் வீடியோவைப் பாருங்கள். தனுஷின் மேலாளர் என்று திட்டவட்டமாக குறிப்பிடவில்லை அதைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காக தனுஷ் சாரின் குழுவுடன் அந்த எண்ணைப் பகிர்ந்து கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளேன். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.