சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். கடந்த வருடம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது பெல்லாரி சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இடையில் சில மாதங்கள் அவர் ஜாமினில் வெளியே இருந்தாலும் மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவர் கன்னடத்தில் நடித்து வந்த டெவில் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அவர் ஜாமினில் வெளிவந்த சமயத்திலேயே இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்றன.
ஆனாலும் பணிகள் தாமதம் ஆகி தற்போது டிசம்பர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முதலில் டிசம்பர் 12ம் தேதி தான் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தர்ஷினின் ரசிகர்கள் இந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட வேண்டுமென முதல் நாளே அனுமதி கேட்டு தொடர்ந்து கோரிக்கை வைத்ததால் ஒரு நாள் முன்கூட்டியே இதன் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட 300 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.