8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான்
பொதுத் துறைகளில் இருப்பது போன்று சினிமாவிலும் 8 மணி நேர வேலையை கொண்டு வரவேண்டும் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வலியுறுத்தினார். இதை நடிகைகள் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போன்றோரும் ஆதரித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் இதற்கு எதிரான கருத்தை பதிவு செய்திருக்கிறார். 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, மலையாள சினிமாவில் பட்ஜெட் சிறியதாக இருப்பதால் நீண்ட தொடர் ஷெட்யூல்களையே பின்பற்றியிருக்கிறோம். இடைவெளி அதிகம் இல்லாமல் விரைவாக ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் தெலுங்கு படங்களில் பணிபுரியும் போது பெரிய பட்ஜெட், சிறந்த திட்டமிடல் இருப்பதால் பெரும்பாலும் மாலைக்குள்ளேயே பேக் அப் ஆகிவிடும். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும்.
குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்பது எப்போதும் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணி நேரம் கூடுதலாக வேலை செய்வது, மற்றொரு முழு நாள் ஷூட்டிங் செய்வதைவிட குறைவான பணமே செலவாகும். எனக் கூறியிருக்கிறார்.
லைப்ஸ்டைல்
நடிகர் ராணா கூறுகையில், சினிமா என்பது வேலை இல்லை. இது ஒரு லைப்ஸ்டைல். இதில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அதைக் குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் அடைக்க முடியாது. தொழிற்சாலையைப் போல அசெம்பிளி லைன் அணுகுமுறை கதை சொல்லலைப் பாழாக்கிவிடும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலையைச் செய்தால் தானாக சிறந்த காட்சி வந்துவிடும் என்று கிடையாது.
தெலுங்கு சினிமாவில் இப்போது பல முன்னணி நடிகர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தவும், ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவும் முடிகிறது. பெரிய நட்சத்திரங்கள் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் சொகுசையும் குறைப்பது அவர்களது பொறுப்பு என்றார்.