10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம்
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர ஜோடிகளில் ஒன்று சூர்யா, ஜோதிகா. இருவரும் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் சூழல் வந்ததால் ஜோதிகா சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார்.
பின்னர் 2015ல் வெளியான '36 வயதினிலே' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சூர்யா, ஜோதிகா இருவரும் தயாரிப்பாளராக மாறிய 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு அது. அதன்பின் அந்நிறுவனம் “பசங்க 2, 24, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், உறியடி 2, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஜெய் பீம், ஓ மை காட், விருமன், சர்பிரா, மெய்யழகன், ரெட்ரோ' ஆகிய படங்களைக் கடந்த 10 வருடங்களில் தயாரித்தது.
'சூரரைப் போற்று, ஜெய் பீம்' ஆகிய படங்கள் சில பல விருதுகளை வென்ற படங்களாக அமைந்தது. 2022ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகியவற்றிக்கான தேசிய விருதுகளையும் பெற்றது.
இந்நிலையில் நேற்று நடந்த சூர்யாவின் 47வது படத்தை சூர்யா குடும்பத்தினரின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜோதிகா என நேற்றைய பத்திரிகைச் செய்தியில் அனுப்பியிருந்தார்கள். மற்ற பங்குதாரர்கள் குறித்த தகவல் இனிமேல் வெளியாகலாம்.