டிச., 18ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‛பராசக்தி' கண்காட்சி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா நடித்த பராசக்தி படம் பொங்கலை முன்னிட்டு ஜன., 14ல் ரிலீஸ் ஆகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கின்ற நிலையில் பட விளம்பரப் பணிகளை படக்குழு தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக சென்னை நுங்கம்பாக்கம் கோட்டத்தில் டிசம்பர் 18ம் தேதி படம் குறித்த மிகப்பெரிய கண்காட்சி நடக்க உள்ளது.
இதில் சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். 1960களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பயன்படுத்தப்பட்ட கார், உடைகள் பொருட்களை அந்த கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளனர். மேலும் இந்த படத்தின் கரு இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதால் அது குறித்த தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் சில விஷயங்களும் கண்காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. படத்தை தயாரிப்பதும் திமுக குடும்பத்தை சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன், படத்தை வெளியிடுவது ரெட் ஜெயண்ட். ஆகவே சென்ட்டிமென்ட்டாக வள்ளுவர் கோட்டத்தில் இந்த கண்காட்சி நடக்க உள்ளது. பொதுவாக பட விழாக்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்படாது. இது திமுக மற்றும் இந்தி எதிர்ப்பு சம்பந்தப்பட்ட கதை என்பதால் அங்கே நடக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் பாடல் வெளியிட்டு விழா நடக்கிறது. படத்துக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்.