உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன்

அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன்

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகளிடம் உள்ள மேனேஜர்கள், பிஆர்ஓக்கள் யாரும் நீண்ட காலத்திற்கு அவர்களிடம் பணிபுரிய முடியாது. அவர்களில் சிலர் தாங்கள் பணிபுரியும் நடிகர்கள், நடிகைகளைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு அவர்களை மீறி வேறு யாரும் அவர்களை அணுக முடியாதபடி நடந்து கொள்வார்கள். சிலருக்கு மேனேஜர்கள்தான் கதைகளையே கேட்பார்கள். அவர்களுக்குப் பிடித்தால் மட்டுமே நடிகர்கள், நடிகைகளை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களை வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கும் இதேதான் நிலை.

கடந்த சில வருடங்களாக சில மேனேஜர்கள், பிஆர்ஓக்கள் மீது தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும் குறை சொல்லும் அளவிற்கு அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து விஷால், ரவிமோகன் ஆகியோர் அவர்களது மேனேஜர்களை நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலுடன் கடந்த பல வருடங்களாக அவரது வலது கரமாக செயல்பட்டு வந்தவர் ஹரி கிருஷ்ணன். விஷால் தற்போது இயக்கி நடித்து வரும் 'மகுடம்' படப்பிடிப்பின் போது நடந்த சில சம்பவங்கள் தான் ஹரிகிருஷ்ணனை அவர் நீக்கக் காரணம் என்கிறார்கள்.

அடுத்து மற்றொரு நடிகரான ரவி மோகன், அவருடன் நெருக்கமாக இருந்த ஷியாம் ஜாக் என்பவரை நீக்கியுள்ளார். ரவியின் பட வேலைகள், அவரது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை ஷியாம்தான் கவனித்து வந்தார். ரவி சொந்தமாக ஆரம்பித்த ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆரம்பித்த பிறகு இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாம். அதனால், அவரை நீக்கும் முடிவை ரவி எடுத்துள்ளார் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் தவிர, இன்னும் சில நடிகர்களும் அவர்களுடன் தொழில் ரீதியாக இணைந்து செயல்படும் சிலரை நீக்கும் முடிவை இந்த புத்தாண்டில் எடுக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !