ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா?
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50வது ஆண்டில் இருக்கிறார். இப்போதும் ஹீரோவாக, 172வது படமான ஜெயிலர் 2வில் நடித்து வருகிறார். இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷன் வரை வாங்கி விட்டார். இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கேவை கூட வாங்கிவிட்டார். இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஏகப்பட்ட விருது, பாராட்டுகளை பெற்றுவிட்டார். ஆனாலும், இன்னமும் அவர் மனதில் சில ஆசைகள் இருக்கிறது. அது இந்த ஆண்டிலாவது நிறைவேற வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியளவில் இன்னமும் முன்னணி ஹீரோவாக, இந்தியாளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் ஒருவரான ரஜினிக்கும் நிறைவேறாத ஆசைகள் இருக்கிறதா என்று கேட்டால், ''ஆம், அவர் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவருக்கு இன்னமும் தேசிய விருது கிடைக்கவில்லை. அவரை உருவாக்கிய குருநாதர் கே.பி.பாலசந்தர் தேசிய விருது வாங்கியுள்ளார். அவரின் போட்டி நடிகரான கமல் வாங்கிவிட்டார். அவருடன் நடித்த பல நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேசியவிருது வாங்கிவிட்டனர். ஆனால், இன்னமும் அது ரஜினிக்கு கனவாக இருக்கிறது.
அதேபோல் இந்திய சினிமாவில் ஹிந்தி, கன்னட, தெலுங்கு மொழி படங்கள் ஆயிரம் கோடி வசூலை தாண்டிவிட்டன. தமிழில் எந்த படமும் அந்த சாதனையை செய்யவில்லை. அதை தனது படம் முதலில் நிகழ்த்த வேண்டும் என விரும்புகிறார். அது இந்த ஆண்டில் அல்லது அடுத்த ஆண்டிலாவது நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறார். ஜெயிலர் 2 படம் ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வாய்ப்பு இருக்கிறது. அதில் ஷாருக்கான் தொடங்கி பல மொழி முன்னணி நடிகர்கள் நடித்து இருப்பதால் பல மாநிலங்களில் ஓடி அந்த வசூலை ஈட்டலாம் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தேசிய விருது என்பது எந்த படத்துக்கு கிடைக்கும் என தெரியவில்லை என்கிறார்கள்.
இந்திய திரையுலகில் ராஜ் கபூர், ரிஷி கபூர், ரன்பீர் கபூர் ஆகியோர் 3 தலைமுறைகளாக நடித்து விட்டனர். தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகர்ஜூனா, நாகசைதன்யா, அகில் தலைமுறையாக நடித்து சாதனை படைத்துவிட்டனர். தமிழில் விஜயகுமார், அருண்விஜய், அவர் மகன் 3 தலைமுறையாக நடித்துவிட்டனர். தனது பேரன் லிங்கா அல்லது யாத்ரா இந்த ஆண்டு அல்லது விரைவில் சினிமாவுக்கு வந்துவிட்டால், 3 தலைமுறை நடிகர் என்ற பெருமையையும் தானும் பெறலாம். அதுவும் நடக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆசைப்படுகிறாராம்.