ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், தணிக்கைச் சான்று கிடைக்காததால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை . இந்த படத்துக்கு சான்று கோரி , தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று வழங்க உத்தரவிட்டார். ஆனால், சென்சார் போர்டு சார்பில் டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்து, அதற்கு தடை உத்தரவு பெறப்பட்டது. இதனால், தேதி குறிப்பிடாமல் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கும் சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் , ஜனநாயகன் பட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயகன் விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி , வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ஜனவரி 20ம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற அமர்வில் தங்களின் தரப்பு வாதத்தை முன்வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.