ஆதரவற்றோர் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்று உணவளித்து பாட்டு பாடி மகிழ்வித்த வினித் சீனிவாசன்
பிரபல மலையாள குணச்சித்திர நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மகன்கள் வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவருமே மலையாள சினிமாவில் இயக்குனர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சீனிவாசன் மறைந்து 40வது நினவு தினத்தில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தங்களது குடும்பத்துடன் வருகை தந்தனர். அங்கு இருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசி அவர்களை மகிழ்வித்தனர். அது மட்டுமல்ல அங்கு இருந்து அனைவருக்கும் மதிய உணவும் விருந்தளித்தனர்.
நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாகவே இருக்கும் மேரி அம்மா என்பவர் வினித் சீனிவாசனை அடையாளம் கண்டுகொண்டு, “நீ தான் நன்றாக பாடுவாயே.. எனக்காக ஒரு பாட்டு பாட மாட்டாயா ?” என்று கேட்டார். உடனே அடுத்த நொடி யோசிக்காமல் தான் பாடிய பாடல்களில் இரண்டு பாடல்களை அடுத்தடுத்து பாடி அந்த வயதான பெண்மணி ஆசையை நிறைவேற்றினார். வினித் சீனிவாசன். இவர்களது இந்த ஆதரவற்றோர் இல்ல விசிட் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.