படம் இயக்க தயாராகும் நவ்யா நாயர்
மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். தமிழில் 'அழகிய தீயே' படத்தில் அறிமுகமாகி சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நவ்யா நாயர் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது 'பாதி ராத்திரி' என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க முடிவு செய்துள்ள அவர், ஒரு படம் இயக்கவும் தயாராகி வருகிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : எனக்குப் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முன்பு சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டே இருந்ததில் அந்த ஆசை கைகூடவில்லை. நடுவில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். ஆனால் முடியவில்லை. குடும்பம், நடனம், ஸ்கிரிப்ட் படிப்பது எனப் பல வேலைகள் இருப்பதால், தொடர்ந்து படம் இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட முடியவில்லை. முன்பு ஒரு ஸ்கிரிப்ட் செய்து வைத்திருந்தேன். அதைச் சில மாற்றங்கள் செய்தால் இன்னும் அது புதிதாக இருக்கும்.
ஒரு பெண்ணுக்கு மூன்று உலகங்கள் இருக்கின்றன. மனதுக்குள் ஓர் உலகம், வீட்டுக்குள் ஓர் உலகம், சமூகம் என்கிற மூன்றாவது உலகம். இதுதான் இந்த படத்தில் முக்கிய மையக்கரு. விரைவில் இந்த படத்தை இயக்குவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் நவ்யா நாயர்.