உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 6 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் மம்முட்டி

6 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் மம்முட்டி


மலையாளத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகர்களில் ஒருவர் மம்முட்டி. மலையாளப் படங்களில் இப்போதும் கதாநாயகனாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து இளம் நடிகர்களை விடவும் வெற்றியையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வந்த 'களம்காவல்' படத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக இருந்தார். 1990ல் வெளிவந்த 'மௌனம் சம்மதம்' படம் மூலம் தமிழ்ப் படங்களில் நடிக்க வந்தார். கடந்த 35 வருடங்களில் 16 தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ''அழகன், தளபதி, மக்களாட்சி, அரசியல், மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், பேரன்பு” ஆகிய படங்கள் குறிப்பிட வேண்டிய படங்கள். அவர் கடைசியாக தமிழில் நடித்த 'பேரன்பு' படம் 2019ல் வெளிவந்தது.

கடந்த ஆறு வருடங்களாக தமிழில் நடிக்காமல் இருந்தார். இங்குள்ள இயக்குனர்கள் அவரை யாரும் அணுகவில்லையா, அல்லது அவர்கள் சொன்ன கதைகளும், கதாபாத்திரங்களும் மம்முட்டிக்குப் பிடிக்கவில்லையா என்பது தெரியவில்லை.

ஆனால், 'தனுஷ் 55' படத்தில் மம்முட்டி நடிக்க உள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பாகவே வெளிவந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் அவர் மட்டும்தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் ராஜ்குமாரி பெரியசாமி உறுதியாக உள்ளார் என்றும் சொன்னார்கள். கடைசியாக அப்படத்தில் அவர் நடிக்கிறார் என்பதை நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்கள்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து மம்முட்டி, “இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன்,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதை மறுபதிவிட்டு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, “சார், இதை நம்பவே முடியாது போல் இருக்கிறது. அன்புள்ள மம்முட்டி சாருக்கு மிக்க நன்றி, இது ஒரு பெருமை“, என்றும் படத்தின் நாயகன் தனுஷ், “இது மிகப் பெரும் பாக்கியம் சார்,” என்று தனுஷும் குறிப்பிட்டுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !