உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் விஜய்க்குப் பின்னடைவு

அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் விஜய்க்குப் பின்னடைவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வெளிவர உள்ள 'ஜனநாயகன்' படத்துடன் சினிமாவை விட்டு விலக உள்ளவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து இந்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக இருந்த படம் 'ஜனநாயகன்'. ஆனால், தணிக்கை வாரியம் படத்திற்கு சான்றிதழ் தர காலதாமதம் செய்வதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்று திரும்பிய அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தது. வழக்கை மீண்டும் தனி நீதிபதி நடத்த உத்தரவிட்டது. சுமார் 10 நாட்களாகியும் அந்த வழக்கு இன்னும் தனி நீதிபதி முன் பட்டியலிப்படவில்லை. இந்த வழக்கில் விஜய் தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் ஒரு மாத காலமாகியும் 'ஜனநாயகன்' பட வெளியீடு குறித்தோ, வழக்கு குறித்தே விஜய் தரப்பு இதுவரை வாயைத் திறக்கவில்லை. தயாரிப்பு நிறுவனமும் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று மற்றுமொரு வழக்கில் விஜய்க்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015-16ம் நிதியாண்டில் 'புலி' படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் ரூ 15 கோடி சம்பளத்தை மறைத்ததாக வருமான வரித் துறை விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் விஜய். இன்று அந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த விதிமுறையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது. அதனால், அந்த அபராதத்தை தொகையை இப்போது விஜய் செலுத்தியாக வேண்டும்.

அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் விஜய்க்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு அரசியல் ரீதியாக அவரது இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அவர் கலந்து கொண்ட கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்த வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. அதற்காக அவர் இரண்டு முறை டில்லி சென்று விசாரணையில் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !