சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ?
விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மாஸ்டர் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'டாக்சிக்'. கன்னடம், ஆங்கிலத்தில் நேரடியாக உருவாகியுள்ள இந்தப் படத்தை கீது மோகன்தாஸ் இயக்க, யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் தெலுங்கு மாநில உரிமைகள் சமீபத்தில் விற்கப்பட்டது. சுமார் 120 கோடி ரூபாய்க்கு அது விற்கப்பட்டதாகச் சொன்னார்கள். பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான தில் ராஜு அந்த உரிமையை வாங்கினார். இதுவரை வேறு எந்த ஒரு டப்பிங் படமும் இவ்வளவு விலைக்கு விற்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவ்வளவு தொகையெல்லாம் விற்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெலுங்குத் திரையுலகத்தினரே விமர்சித்தார்கள்.
இந்நிலையில் தற்போது படத்தின் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிநாடுகளில் வெளியிட இப்படத்தை 105 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்களாம். படம் ஆங்கிலத்திலும் தயாராகி உள்ளதால் அந்த மொழி உரிமையை சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள நிறுவனத்திடம் விற்க முயற்சித்து வருகிறார்களாம்.
இந்த 105 கோடி ரூபாய் உரிமை விலை என்பது இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் விற்கப்படாத ஒரு சாதனை விலை என்கிறார்கள். வழக்கம் போலே இதிலும் பில்டப் செய்கிறார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது.
குறிப்பாக தெலுங்கு திரையுலகத்தினரும், இன்புளூயன்சர்களும் தான் இவ்வளவு விலை எல்லாம் விற்றிருக்க மாட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் என கன்னடத் திரையுலகில் சொல்கிறார்கள்.
தென்னிந்திய மொழிகளில் தெலுங்குத் திரைப்படங்கள்தான் அதிக அளவில் பான் இந்தியா படமாக வெளியாகின்றன. அடுத்து ராஜமவுலி இயக்க உள்ள 'வாரணாசி' படம்தான் புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு கன்னடப் படம் இவ்வளவு விலைக்கு சாதனை புரிகிறது என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் 'டாக்சிக்' ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.