தேர்தலுக்குப் பிறகுதான் 'ஜனநாயகன்': உறுதி செய்கிறதா 'கில்லி, தெறி' ரீரிலீஸ்
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. வழக்குகளை வாபஸ் பெற்று தணிக்கை வாரிய நடைமுறைப்படி செல்கிறோம் என தயாரிப்பு நிறுவனம் சொல்லிவிட்டது. இருந்தாலும் தணிக்கை வாரியம் அவர்களது விதிப்படி ரிவைசிங் கமிட்டி வேலைகளை முடிக்க 20 நாட்கள் ஆகலாம் என்றார்கள்.
இதனிடையே, அடுத்த வாரம் பிப்ரவரி 27ம் தேதி விஜய் நடித்த 'தெறி' படத்தை ரிரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்கள். 'ஜனநாயகன்' அடுத்த வாரமும் வர வாய்ப்பில்லை என்பதை அறிந்த பிறகு இதை அறிவித்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த மாதக் கடைசியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். அப்படி அறிவிப்பு வந்த பிறகு 'ஜனநாயகன்' படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது. எனவேதான் விஜய்யின் பழைய படங்களை ரிரிலீஸ் செய்யும் முடிவில் சில தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளார்கள்.
இந்த வாரம் பிப்ரவரி 20ம் தேதி 'கில்லி' படமும் இரண்டாவது முறையாக ரீரிலீஸ் ஆகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் விஜய்யின் வேறு சில படங்கள் ரீரிலீஸ் ஆகலாம் என்றும் சொல்கிறார்கள்.