நுகர்வு, சுவை திறனை இழந்த மம்முட்டி
மம்முட்டி தற்போது அதிகமான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் அவற்றில் அவர் தளர்ந்து காணப்படுகிறார். இதற்கு காரணம் அவர் கடந்த ஒரு ஆண்டாக சென்னையில் தீவிர சிகிச்சை பெற்றார். அவருக்கு ஒரு விதமான புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து மீண்டு விட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.
இந்த நிலையில் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது : ‛‛எனக்கு சில காலமாக வாசனை மற்றும் சுவை அறிந்து கொள்ளும் உணர்வு இல்லாமல் போனது. எந்த வாசனையாக இருந்தாலும் அதை உணர முடியவில்லை. சாப்பிட்டால் உணவின் சுவை தெரியவில்லை. கொரோனா பாதிப்பாக இருக்கலாமோ என எண்ணியபோது, பரிசோதனைக்கு பிறகு வேறு பிரச்னை என்பது தெரிந்தது. நமக்கு பார்க்கும் திறன், கேட்கும் திறன் இவை இரண்டும் கடவுள் தந்த வரம். அதேபோல்தான் சுவை திறனும். இப்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன்.
நாம் யாரையாவது சத்தத்தைக் குறைக்கச் சொன்னாலோ அல்லது மென்மையான குரலில் பேசச் சொன்னாலோ, அது நம்மால் கேட்க முடியும் என்பதால்தான். கேட்க முடியாதவர்கள் ஒருபோதும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைக் கேட்க விரும்புகிறார்கள். கேட்பது ஒரு தெய்வீக வரம்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.