இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில்
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு 90களில் முன்னணி கதாநாயகி வரிசைக்கு உயர்ந்தவர். ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் கதாநாயகியாக நடித்த மீனா, 2009ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். அவருக்கு நைனிகா என்கிற மகள் இருக்கிறார்.
கடந்த 2022ல் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவு காரணமாக காலமானார். சமீபகாலமாகவே மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற செய்தி அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால் அவரும் மறுத்து வந்தார். இருப்பினும் அந்த வதந்தி நிற்கவில்லை.
இந்த நிலையில் மீனா மலையாளத்தில் நடித்துள்ள ரோஸ்லின் என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் மீனா, தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛நான் ஒரு நடிகை என்பதாலேயே, ஒரு பெண் என்பதாலேயே, தனியாக இருக்கிறேன் என்பதாலேயே இது போன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன. நான் உண்மையிலேயே செமையாக கோபப்படுவேன், இது போன்ற வதந்திகளை தொடர்ந்து பரப்பி வந்தால் எப்போது என்னுடைய பொறுமையை இழப்பேன் என்று தெரியாது” என்றும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் மீனா.