தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன?
கொச்சியில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் அமரனுக்காக சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அதில் நடிகர் தனுஷை நினைவு கூர்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில் ''இந்த பிலிம்பேர் விருது தான் என்னுடைய முதல் விருது. நான் முதன்முதலாக பிலிம்பேர் விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன். அதுவும் 13 ஆண்டுகளுக்குமுன் வந்தேன். அவர் தான் சும்மா வா, ஜாலியாக போய்ட்டு வரலாம் என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு 2வது வரிசையில் தான் சீட் ஒதுக்கப்பட்டது. அந்த காலத்தில் அப்படி. இன்று முதல் வரிசையில் எனக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகளாகியுள்ளது.
அமரன் படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது அமரன் எனக்கு தொடர்ந்து விருது கொடுத்துக் கொண்டே இருக்கும் என்று சொன்னேன். அதேப்போல் இந்த படம் இன்னும் எனக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்திற்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்த படத்துக்காக கமல்ஹாசன் ஆபீஸ் சென்றபோது, அவர் வரவேற்பரையில் ஏகப்பட்ட பிலிம்பேர் விருதுகளை பார்த்தேன். அப்போது எனக்கும், அமரனுக்காக கிடைக்கும் என்று நினைத்தேன், இன்று அது கிடைத்திருக்கிறது. நான் மிகவும் சீரியஸான மனிதன் இல்லை, ஜாலியான ஆள்தான். ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்தப்பின் ஏன் இப்படி செய்தாய்? என்று யாரும் கேட்கவில்லை. எல்லாரும் பாராட்டினார்கள், அதற்காக அனைவருக்கும் நன்றி.
முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி, எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும் மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று பிலிம்பேர் விருதுடன் நிற்கிறேன் என்று சொல்லி, விருதை கொடுத்த சிம்ரனுக்கும், அமரன் நிஜ ஹீரோ முகுந்த் வரதராஜனுக்கும் அவர் நன்றி சொன்னார். சிவகார்த்திகேயன் தனுஷ் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.